Thursday, May 26, 2005

சுனாமி அழிவுகள்.........

சுனாமி அழிவுகள்.........

(தை மாதம் 11 ஆம் திகதி எழுதியது.)

சீற்றத்துடன் கொந்தளித்த கடல் ஆயிரமாயிரம் மக்களை கொலை செய்து விட்டதுமல்லாமல், மீதி இருந்த மக்களையும் நிலை குலையச் செய்துவிட்ட அனர்த்தத்தால் மனது மிகவும் களைத்து இருக்கிறது. இது பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று பல தடவை தோன்றினாலும், எதுவுமே எழுத முடியாமல்.... முயற்சிகள் வீணாகியது. எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டபோது, அவற்றினிடையே வார்த்தைகளும் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தேன். எத்தனை கொடுமை நடந்து விட்டது. செய்திகளைக் கேள்விப்படும்போது மனது பாரத்தால் கனத்துப் போகின்றது. கண்கள் குளமாகின்றன. நடந்து விட்ட கொடூரம் மனதை பிசைகிறது. கடந்த வருடத்தின் கடைசி ஞாயிறு எல்லோர் மனதிலும் கவலையை விதைத்துச் சென்று விட்டது. நெஞ்சமெல்லாம் வெறும் மேக மூட்டம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. துயரத்துடன் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

நடந்து முடிந்துவிட்ட கொடூரத்தை நினைத்தால் யாருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லக் கூட மனதிற்கு தைரியமில்லாமல் இருந்தது. கோரமான இந்த அழிவில் இறந்துபோன உயிருடன் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற எத்தனை எத்தனை மனிதர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது தற்போதைய நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில், வாழ்த்துக்கள்கூட எந்த அர்த்தமும் இல்லாதவையாக மனதிற்கு தோற்றம் தந்தது. இயற்கையின் கொடூரம் இத்தனை பயங்கரமாக இருக்கக் கூடும் என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது போல் இருக்கிறது. நமது நிலத்தில், நமது இனத்தில், அதுவும் ஏற்கனவே பல வழிகளாலும் நொந்து போயிருக்கும் ஒரு சமூகத்திலும் இது நேர்ந்திருக்கிறது என்பதை எண்ணும்போது மேலும் மேலும் துன்பம் அதிகரிக்கிறது.

எத்தனை ஆயிரம் குழந்தைகள்... அப்பப்பா.. நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாய் குழந்தைகள் என்று அறிகையில். பாதிக்கப்பட்ட இடங்களில் எப்படி எதிர்காலம் அமைய போகின்றது என்ற கேள்வி மனதை குடைகிறது. எதிர்காலச் சந்ததியின் முக்கியமான பகுதியையே கடல் கொண்டு போய் விட்டது என்பதை நினைக்கையில் சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியானது போல் இருக்கிறது.நமது எந்த ஆறுதலும் தமது குழந்தைகளை, கணவனை, மனைவியை என பல நெருங்கிய உறவுகளையும் பறி கொடுத்து விட்டுத் தவிக்கும் மக்களுக்கு உண்மையான ஆறுதலாக அமைய முடியாமா என்பது தெரியவில்லை. பலரும் மனிதாபிமானத்துடன் செய்யும் பண உதவிகள், பொருள் உதவிகள் அவர்களது தொடரப் போகும் வாழ்க்கையை கட்டி எழுப்ப உதவும்தான். ஆனால் அவர்களது இழப்பை ஈடு செய்யுமா என்பது தெரியவில்லை. நம்மாலும் வேறு எதைத்தான் செய்துவிட முடியும் என்பதும் புரியவில்லை. எத்தகைய கொடூரம் நடந்து முடிந்து விட்டது. எத்தனை ஆயிரம் மனிதர்கள் ஒரு சில நிமிடங்களில் கடல் அலைகளினுள் காணாமலே போய் விட்டனர். நினைக்க நினைக்க மனது ஆறுவதாயில்லை. செய்திகளைப் பார்க்கையில் உள்ளம் குமுறுகிறது. அதற்காக பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. இன மத பேதம் எதுவுமே இல்லாமல், கடல் இப்படி ஒரு அட்டூழியத்தை நிறைவேற்றிச் சென்றுவிட்டது.

கடலின் கோரத்தாண்டவத்தில் இருந்து பாதுகாக்க, தனது மூன்று குழந்தைகளில், இரண்டை மட்டுமே தனது இரு கரங்களால் இழுத்துப் பிடிக்க முடிந்ததாகவும், மூன்றாவது குழந்தையை கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்திருந்தும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கதறும் ஒரு தாய். மூன்று குழந்தைகளில் ஒன்றை விட்டு ஒன்றை தெரிவு செய்வது ஒரு தாயால் முடிகின்ற காரியமா? இந்த சூழ்நிலையில் அந்த தாயின் மன நிலையை நினைத்தாலே மனம் பதறுகிறது. தனக்கு மூன்று கைகள் இருந்திருக்கக் கூடாதா என்று நொந்து கொள்ளும் அந்த தாய்...

பொங்கி வரும் கடல் அலை கண்டு, இனி ஓடி தப்ப முடியாது என்பதை உணர்ந்து, அருகில் இருந்த தோணிகளை இழுத்துக் கட்டும் இரும்புக்கம்பியை கட்டிபிடித்தபடி இருந்த ஒருவர், தன்னை மூழ்கடித்த அலை திரும்பிப் போன பின்னர், மறுபுறம் திரும்பிப் பார்த்தால், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, தன்னை கடந்து சென்ற அலை, இழுத்துக் கொண்டு கடலினுள்ளேயே திரும்பி விட்டது என்கிறார். கண்முன் விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பாலகர்களை ஒரு சில வினாடிகளில், அடித்துச் சென்று விட்ட கடலை சபிக்கும் அந்த நபர்...

பெரிய கடல் அலை வருகிறது என்று ஐந்து வயதுக் குழந்தை ஓடி வந்து எச்சரிக்கை கொடுத்ததில், ஆலயத்தில் இருந்து ஒடியதில் பல பெரியவர்கள் தப்பித்துக் கொள்ள, எச்சரிக்கை கொடுத்த குழந்தை உட்பட பல குழந்தைகளை கடல் அலை அடித்துச் சென்ற பரிதாபம். என்னைக் காப்பாற்றிய குழந்தையால், தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே என்று முணுமுணுக்கும் பாதிரியார்...

தனது தாய் இறந்து விட்டார் என்பதை உணராத நிலையில், அருகிலேயே இருந்து கவனிப்பாரற்று அழுது கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தை...

சில சம்பிரதாயங்களை நிறைவேற்ற கடற்கரைக்கு வந்த புது மணத்தம்பதிகளை, கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்தும், காப்பாற்ற முடியாத வருத்ததில் கரையில் இருந்து ஓடித் தப்பிய உறவினர்கள்...

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த தனது துணையை கடல் கொண்டு சென்றுவிட்ட நிலையில், கடலை கேள்வி கேட்டபடி கடற்கரையிலேயே உலாவிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்...

இப்படி எத்தனை எத்தனை செய்திகள்... தாங்கவே முடியவில்லை. காலங்காலமாய் நடத்தி வந்த நிகழ்வுகளையே இயற்கை இப்போதும் நடத்தி முடித்திருக்கிறது என்பது இந்த அறிவுக்கு புரிகிறது. உலக வரைபடத்தில், நாட்டின் எல்லைகள், நாட்டின் எண்ணிக்கைகள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு வந்ததே இத்தகைய இயற்கை அழிவுகளுடன் இணைந்துதான் என்பதும் கூட அறிவுக்குப் புரிகிறது. ஆனாலும் என்ன, இந்த மனதுக்கு அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தியோ, ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ இல்லாமல்தானே இருக்கிறது. இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள இந்த கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே.

ஆக்கியவன் அழிக்கிறான், இது ஆண்டவன் நியதி என்கிறது ஆன்மீகம். அழிப்பவன் இப்படி கொடூரமாகவா அழிக்க வேண்டும் என மனது கேள்வி கேட்கிறது. உயிரை இழந்தவர்களை விடவும், இதை எல்லாம் நேரில் அனுபவித்துவிட்டு, பரிதாபமான சூழ்நிலையில், பெற்றோரை இழந்த குழந்தை, குழந்தையை இழந்த பெற்றோர், இன்னும் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன்.. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள். கண்முன்னாலேயே கடலுக்கு காவு கொடுத்து விட்டு இருக்கும் அவர்களது இழப்பு, அவர்களால் வாழ்க்கையில் மறக்க கூடியதா என்ற கேள்வி தீயாய் தகிக்கிறது. உலகின் நியதி, இயற்கையின் நியதி, ஆண்டவன் நியதி என்ன பெயர் சொல்லி அழைத்துக் கொண்டாலும் அறிவுக்கு புரிவது மனதுக்குப் புரிவதாயில்லை. அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இப்படி நிலைகளில் அடிபட்டுத்தான் போகின்றது. மனமெல்லாம் வெறுமையாய் இருப்பது போல் உணர்வு, என்ன இது வாழ்க்கை என்றுதான் தோன்றுகிறது.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வேதனையான நிலைகளிலும் சிலரது கருத்துக்களும், வேறு சிலரது நடவடிக்கைகளும் ஆச்சரியமாகவும், மிகவும் வேதனையை தருவதாகவும் இருக்கிறது. இந்த இயற்கையின் கொடூரத்தை எப்படி எல்லாம் தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்ள விளைகிறார்கள் என்று எண்ணும்போது ஆத்திரமும் கூடவே வருகிறது. சிவ அடியாரை (அதாவது ஜெயேந்திரரை) நிந்தித்ததால், இந்த இயற்கை அழிவின் மூலம் சிவன் உலக மக்களுக்கு பாடம் கற்பித்து விட்டார் என்பதுபோல் ஜெயேந்திரருக்கு ஆதரவான சில ஆத்மாக்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்களாம். இப்படி எல்லாம் சொல்வதற்கும், அதை கேட்பதற்கும் முட்டாள்கள் இருக்கிறார்களே என்று எண்ணும்போது, சிரிப்பதா, அழுவதா, ஆத்திரப்படுவதா, அவர்களின் முட்டாள்தனத்தை எண்ணி பரிதாபப்படுவதா என்று புரியாமல் இருக்கிறது. இத்தனை கொடூரமாய் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்து போனார்களே என்ற எண்ணம், தவிப்பு சிறிதளவாவது இருந்திருந்தால், அவர்கள் இப்படி சொல்லி இருப்பார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன். சே..... என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம். ஒரு தனி மனிதனுக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இத்தனை உயிர்களை சித்திரவதை செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தவரா ஆண்டவர். இந்த மனிதர்கள் எதற்கு இப்படி எல்லாம் சிந்திக்கிறார்களோ தெரியவில்லை.

ஒரு வலைப்பூவில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியன் எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்... ஜெயேந்திரருக்கு இப்படி செய்ததற்கு தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும் தண்டனையே இது, அதனால் தயவு செய்து யாரும் அங்கே இருக்கும் மக்களுக்கு (அதாவது தப்பி பிழைத்த மக்களுக்கு) எந்த ஒரு உதவியும் செய்யாதீர்கள் என்று. இவர்கள் எல்லாம் படித்தவர்களாம். யாரிடம் சொல்லி அழுவது. ஆண்டவன்தான் வாய்மூடி மெளனமாகவே எப்போதும் இருக்கிறாரே.

அது மட்டுமல்ல. நடந்து முடிந்த பரிதாப நிலையை தமது சுய இலாபத்திற்கு பாவித்துக் கொள்ளும் இரக்கமற்ற மனிதர்கள். நிவாரணப் பொருட்களை உரியவர்களுக்கு வழங்காமல் சொத்துச் சேர்க்க நினைக்கும் அதிகாரிகள். தனித்து, தவித்திருக்கும் குழந்தையை விற்று, பணம் பார்க்க விரும்பும் கொடூர உள்ளம் படைத்தவர்கள். அழுதுகொண்டிருக்கும் பெண்களை (குழந்தைகளை) பாலியல் கொடூரம் செய்ய நினைக்கும் கல் நெஞ்சக்காரர்கள், பெரிய மட்டத்தில் பார்க்கப் போனால் பாரிய அரசியல் சூதே நடக்கிறது. இத்தனையும் பார்க்கையில் மனம் கொதிக்கிறது.

Friday, May 20, 2005

மதங்களும் மனிதர்களும்....

மதங்களும் மனிதர்களும்....

மதங்கள் பற்றி எனக்குள் ஓராயிரம் கேள்விகள். அவற்றில் சிலவற்றை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆண்டவன் ஒருவன்தான் என்பதையும், அவரை வேறுபட்ட வழிகளில் பார்க்க விளைகையில் தோன்றியதே மதங்கள் என்பதையும் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். வேறுபட்ட மதங்கள், வேறுபட்ட சமூகத்தினரை ஒரு இலக்கை நோக்கி நகர்த்தும் பல வழிப்பாதை என்றால், மதங்களின் பெயரால், மக்களுக்கிடையே சண்டைகள் ஏன்? மத போதனைகள் மூலம் மக்களை நல் வழிப்படுத்த வேண்டிய மதகுருமார்கள் சிலர், மதங்களின் பெயர் சொல்லி, மக்களிடையே அன்புக்கு பதில் ஆணவத்தை விதைப்பது ஏன்? கலகங்களை தூண்டுவது ஏன்? இப்படிப்பட்ட போதனைகளின் பயன் என்ன? அது மட்டுமா, ஆண்டவனின் பெயரில் நல்வழியை மக்களுக்கு உணர்த்த வேண்டிய பலர் எத்தனை கேவலமாக குற்றம் சுமத்தப் படுகிறார்கள். உண்மையில் அவர்கள் ஆண்டவன் தொண்டை மட்டுமே எண்ணி நடந்திருந்தால், அவர்கள்மேல் இத்தகைய குற்றங்கள் செலுத்த எவரும் முன் வர வேண்டிய அவசியம்தான் என்ன? அவர்களது நடவடிக்கைகளிலும், அவர்களது தொடர்புகளிலும் தவறு உள்ளது என்றுதானே அர்த்தமாகிறது?? ஆண்டவன் எங்கும் நிறைந்து இருப்பது உண்மையானால், எத்தனையோ அநாதரவான குழந்தைகள், முதியவர்கள் அநாதையாகி நிற்கையில், அதிக செலவில் தேவைக்கும் அதிகமான கோவில்களை நிர்மாணிப்பது அவசியமா? ஒரு குறிப்பிட்ட கோவில் மிக சக்தி வாய்ந்தது என்று பலர் குறிப்பிட கேட்டிருக்கிறோம். அப்படியானால், வேறு ஒரு கோவிலில் இருக்கும் அதே கடவுள் சக்தி அற்றது என்றோ, சக்தி குறைந்தது என்றோ அர்த்தம் ஆகுமா?
அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் ஆயிரமாயிரம் மக்கள் இருக்கையில், காணிக்கை என்ற பெயரில், வேள்விகள் என்ற பெயரில் கோடி கோடியாய் பணத்தை கொட்டுவது அவசியம்தானா? பால் எப்படி இருக்கும் என்று அறிய ஆவலாய் இருக்கும் ஏழை எளியவர் ஆயிரம் இருக்கையில், பாலாபிசேகம், தேனாபிசேகம் அவசியமா? ஆண்டவன் சந்நிதானத்திலேயே பலி என்ற பெயரில், உயிர் வதை, கொலை இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறதே? இது அவசியம்தானா? உண்மையில் ஆண்டவன் இதை ஏற்று கொள்வாரா? இந்த மூட நம்பிக்கைகள் நம்மை விட்டு விலகுவது எப்போது?
ஒருவருக்கு ஒருவர் உதவுவதில், அன்பை எந்த வேறுபாடும் இன்றி செலுத்துவதில் நாம் ஆண்டவனை அடையாளம் காண முடியாதா? நம்மை எல்லாம் மீறிய சக்தி ஒன்று இருப்பது உண்மைதான். அந்த சக்தியை நாம் ஆண்டவன் என்று அழைப்பதும் சரியாக இருக்கலாம். ஆனால் அதே பெயரால் நடக்கும் அநியாயங்கள் சரியா? எனது கேள்வியெல்லாம் ஆண்டவன் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட, அவர் பெயரால் நடக்கும் அநியாயங்கள் அவசியம்தானா, அவை தொடர்வதற்கு நாமும் காரணம் ஆகலாமா என்பதுதான். மனித நேயத்தில் இருந்து மனிதர்களை அந்நியப்படுத்தி அழைத்து செல்லும் பாதைகள் காட்டப்படுவதையும், அதை எல்லாம்பற்றி சிந்தித்து பார்க்காமல், நாமும் அவற்றை எல்லாம் தொடர்ந்து கொண்டிருப்பதையுமே ஆதங்கத்துடன் எண்ணி பார்க்கிறேன். உதாரணத்திற்கு, ஆண்டவனை தங்கத்தில் செய்து காணிக்கை தருவதாக வேண்டுதல் செய்கிறார்கள். அதற்கு செலவளிக்கும் பணத்தை ஒரு அநாதை குழந்தையின் முன்னேற்றத்தில் பாவிப்பதாக வேண்டிக்கொண்டால் என்ன என்பதே எனது கேள்வி. ஆண்டவனை அவரவர் நம்பிக்கைபடி எப்படியும் காணலாம். ஆனால் எந்த ஆண்டவனும் இப்படி ஒரு நல்ல செயலை விட்டு தன்னை தங்கத்தால் அலங்கரிக்க ஆசைப்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்படி நல்ல வழிகளை நாம் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.
இப்போதெல்லாம் பல இடங்களிலும் தெரிவது, ஆண்டவனோ, பக்தியோ அல்ல. சமூகம் பற்றிய சிந்தனை சிறிதும் அற்ற, வெறும் படாடோபமே. ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்யும் அவசரத்தில் அநாதைகளை அலட்சியம் செய்பவன் ஆஸ்திகனா, அர்ச்சனைபற்றி அலட்டி கொள்ளாமல் அநாதைகளை அரவணைப்பவன் ஆஸ்திகனா? கடவுளுக்கு கற்பூரம்தான் முக்கியம், கலங்கி நிற்பவர் பற்றி கவலை இல்லை என்பவன் ஆஸ்திகனா, கலங்கி நிற்பவருக்கு கருணை செய்வதே கடவுள் வழிபாடு என்று எண்ணுபவன் ஆஸ்திகனா? ஆண்டவனுக்கு ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து பார்க்க ஆசைப்படுபவன் ஆஸ்திகனா, சொந்தங்கள் இல்லாதோரை சொந்தமாக்கி அதில் அமைதி தேடுபவன் ஆஸ்திகனா?எங்கோ ஒரு இடத்தில் வாசித்த ஒரு விடயம் சிந்தனையில் வருகிறது. வாஸ்து சாஸ்திரப்படி கோவில் கட்டினால்தான் அந்த கோவில் சக்தி உள்ளதாய் இருக்குமாம். இல்லாவிட்டால் அந்த கோவில் அல்லது அங்கிருக்கும் கடவுள் சக்தி அற்றது என்று அர்த்தம் ஆகுமா? அப்படி என்றால் எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆஸ்திகன் என்று தன்னை சொல்லிக்கொண்டு, ஆண்டவனின் சக்தியையே சந்தேகப்படுபவனை என்ன சொல்வது?
* இங்கே எனது சிந்தனையை தூண்டிய சில குழந்தைகளின் கேள்விகளை, உங்கள் சிந்தனைக்கும் முன் வைக்க விரும்புகிறேன். சில கோவில்களில் மிருக உயிர்களை பலி கொடுத்தது பற்றி பெரியவர்கள் பேசி கொண்டதை தற் செயலாக கேட்க நேர்ந்த ஒரு 5 வயது குழந்தையின் கேள்வி இது... கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எப்போதாவது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அவர் ஆடு எல்லாம் சாப்பிடுவாரா? சரஸ்வதி பூசைக்கு அவர் முன்னால் சாப்பாடு வைத்தோமே, ஆனால் அவர் சாப்பிடவில்லையே, ஏன்? அப்படியென்றால் எதற்கு அப்படி வைக்கிறோம்?
திருஞானசம்பந்தர்பற்றி பாடம் சொல்லி கொடுத்தபோது இன்னொரு குழந்தையிடம் இருந்து புறப்பட்ட இன்னொரு கேள்வி இது... திருஞானசம்பந்தர் அழுதபோது உமாதேவியார்தானே வந்து பால் கொடுத்தார். அப்போ ஏன் அவர்களைபற்றி பாடாமல் திருஞானசம்பந்தர் சிவனை நோக்கி பாடினார். இதை வாசிக்கும்போது சிரிக்க தோன்றலாம். ஆனால் இது சிந்தனையையும் தூண்டுவது தவிர்க்க முடியாது என எண்ணுகிறேன்.
இந்த குழந்தைகள் மனதிற்கு புரியும்படி எதை சொல்வது என்பது பெரிய பிரச்சனையே.......
மதம் என்று பேசிக்கொள்வார்கள். மதத்தில் உண்மையில் சொல்லப்பட்டு இருக்கிறதோ இல்லையோ மதம் என்ற போர்வையில் தேவையற்ற, அவசியமற்ற செயல்கள் எல்லாம் கடைப்பிடிப்பார்கள். ஆனால் அங்கே சொல்லப்பட்டிருக்கும், அற்புதமான கருத்துக்களைப்பற்றி கவலையே பட மாட்டார்கள். இதுதான் மனதை சங்கடப் படுத்துகிறது.
முழுமையான சுய மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் மற்ற உயிர்களிடம் கருணை, அன்பு கொண்டு மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதாதா?
விடைகாண விளையும் கேள்விகள் இங்கே.

நமது பண்பு????

நமது பண்பு????

அண்மையில் எமக்கு ஒரு அழைப்பு வந்தது... விழாவாம், பூப்புனித நீராட்டு விழாவாம்.....
மகள் வயதுக்கு வந்துதான் ஆறு மாதமாயிற்றே, அப்போது கூட ஒரு விழா எடுத்தீர்களே வினாவினோம்... அது.. அவசரமாய் உடனுக்கு செய்தது உறவுக்கு மட்டுமே எடுத்த விழா...இப்போது இது...ஊருக்கு சொல்லி செய்வது...இயம்பினார்கள்...
ஐந்நூறு பேர் கூடும் மண்டபமாம் - அதை நிரப்ப மனிதர்கள் வேண்டுமாம். தேடி அலைவதாய் சொன்னார்கள்... என்னே அன்பு... வியந்தேன் நான்... மண்டபம் நிரப்ப மக்கள் தேடும் பண்பு...வெட்கமே இல்லாமல், வெளிப்படையாய் சொன்னார்கள். மண்டபம் நிரம்பாவிட்டால் வீடியோ அழகிராதாம் - அதனால் கட்டாயம் வரும்படி கட்டளை போட்டார்கள்... மண்டபத்தை நிரப்பத்தான் மனிதர்கள் தேவையா? மனங்களை நிரப்ப இல்லையா? மனதில் எழுந்தது கேள்வி.
எதற்காக கொண்டாட்டம் என்ற கேள்விக்கு. நமது கலாச்சாரம் பேணவாம் பதில் வந்தது. பங்கு கொண்ட அனைவருக்கும் குத்து விளக்கு பரிசாம்.குழந்தையவள்... பத்து வயதேயானவள். விழா பற்றி கேட்டேன். நகை நட்டு அலங்காரம், பளபளக்கும் உடைகள், அழகாயிருந்ததுவாம். நிறையப்பேர் வந்தார்கள், நிறையப் பரிசுகளாம். குழந்தையவள் மனதின் எஞ்சிய பதிவுகள் இவை...
இப்படியாக நடத்தப்படும் விழாக்களைப்பற்றி யோசித்துப் பார்க்கிறேன். இந்த ஆடம்பர கொண்டாட்டங்கள்தான் நமது கலாச்சாரமா? இந்த கொண்டாட்டங்களே நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து விடுமா? சடங்குகள் சம்பிரதாயங்கள் எதற்கு செய்கிறோம்? காலங்காலமாய் செய்ததை நாமும் செய்கிறோம் சொல்கிறார்கள். ஆனால்..... பழையவர் செய்ததில், பல பல மாற்றங்கள் பகட்டுக்காகவென வசதிக்கேற்பவென, செய்துதானே இருக்கிறோம். அப்படி மாற்றங்களை கொண்டு வர தெரிந்த நமக்கு, அவசியம் இல்லாதவற்றை ஒதுக்கியும், அவசியமானவற்றை செய்யவும் கூடிய மாற்றங்கள் மட்டும் ஏன் பிடிக்காமல் போயிற்று? புரியவில்லை எனக்கு.
சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அந்தந்த காலத்திற்கேற்ப மாறி கொண்டுதான் வந்திருக்கின்றன. உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாமலே எதுவும் இருந்தது இல்லை. அப்படி இருக்கையில், பகுத்தறிவதன் மூலம் தேவையற்ற சடங்குகளை தவிர்த்து, தேவையானவற்றை தொடர்ந்தால் என்ன கெட்டுப் போய் விடும்?
திருமணத்தை எடுத்துக் கொண்டால், எத்தனை பவுணில் தாலி செய்யப்படுகிறது என்பதே பிரதானமாயிருக்கிறது. உண்மையில் நடந்த ஒரு விடயத்தை கூறுகிறேன். ஐரோப்பிய நாட்டில் வாழும் சகோதரர்கள் இருவருக்கு திருமணத்திற்கு தயாராய் பெண்கள் இருவர் அந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். தம்பி திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்து கொள்ளபோவதாய் அந்த அண்ணன் இருந்தார். காரணத்தை அறிந்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தம்பி எத்தனை பவுணில் தாலி போடுகிறானோ என்று பார்த்து விட்டு, அதை விட அதிகமாய் தாலி செய்து போடுவதற்காய் அண்ணன்காரன் காத்திருந்தான். பார்த்தீர்களா மனித பண்பை. கடைசியில் தம்பி 40 பவுணும், அண்ணன் 50 பவுணிலும் தாலி செய்து மனவிமாருக்கு போட்டுள்ளார்கள். அவர்கள் அந்த தாலியை காவிக் கொண்டு திரிவதில் உள்ள சிரமம் கருதியும், கள்ளர் பயத்திலும், தாலியை கழற்றி வங்கியில் வைத்து விட்டு இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து நமது கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
நமது பழைய நடைமுறையில், விழாவுக்கு வருகிறவர்களுக்கு சந்தன கும்பா, குத்து விளக்கு, எவர்சில்வர் தட்டு எல்லாம் கொடுத்து விடும் வழக்கம்தான் இருந்ததா? ஒரு சிலர் வாதிடலாம், இவை எல்லாம் ஒரு நட்புக்காய், மற்றவருக்கும் நமது அன்பை காட்ட கொடுக்கிறோம் என்று. ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், ஒருவர் செய்வதை விட நாம் அதிகமாக செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை. ஒருவர் 100 பேரை விழாவுக்கு அழைத்தால், இதோ நான் 200 பேரை அழைக்கிறேன் பார் என்ற போட்டி. அவர் என்ன சந்தன கும்பாதானே கொடுத்தார், இதோ பார் நான் பெரிய குத்து விளக்கே கொடுக்கிறேன் என்ற அகங்காரம். அவர் 5 பலகாரம்தானே செய்து கொடுத்தார், நான் பார் 7 பலகாரம் செய்துள்ளேன் என்ற ஆணவம்.
இவை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படால் சந்தோஷம்தான். ஆனால் அதுவா இங்கே நடக்கிறது? இந்தப் போட்டி மனப்பான்மை உறவினர்களுக்குள்ளேயே, ஏன் சகோதரர்களுக்குள்ளேயே இருப்பதுதான் இன்னும் வேதனை. கடன்பட்டாலும் பரவாயில்லை. விழா பெரிதாக நடக்க வேண்டும் என்பது சிலரது ஆதங்கமாய் இருக்கிறது. இதுதானா நமது கலாச்சாரம்? இதுதானா நமது குழந்தைகளுக்கு நாம் புகட்டும் பண்பாடு?
பொருளுக்கு இருக்கும் மதிப்பு அன்புக்கு இல்லை என்பதைத்தானா நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும்? இதைவிட பெரிய கேலிக் கூத்து என்னவென்றால், எத்தனை பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்பதில் கூட ஒரு பெருமை. அதிகமானோருக்கு அழைப்பிதழ் அனுப்பினேன் என்பதை சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளுவதற்காக, என்றுமே கதைத்து அறிந்திராதவருக்கு கூட, நிச்சயமாக விழாவுக்கு அவர்கள் வரப்போவதில்லை என்பதை அறிந்தே இருந்திருந்தாலும் கூட அவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது.
இப்படி பெரிதாக எடுக்கப்படும் விழாக்களில், எத்தனை உறவினர்கள், நண்பர்களிடம் நின்று நிதானமாக பேச நேரம் கிடைக்கிறது? ஓடி ஒடி வீடியோவுக்கு ஒவ்வொருவராய் அழைத்து நிற்க வைத்து படங்கள் எடுத்துக் கொள்வதுடன், சாப்பாட்டுக்கு அழைத்து உட்கார வைத்து விடுவதுடன் நெருக்கம் நிறைந்து விடுமா என்ன? எவ்வளவோ தூரத்தில் இருந்து விழாவுக்கு வந்து போவார்கள். ஆனால் எவருடனும் நிதானமாக பேசக்கூட நேரம் கிடைக்காது.
அது மட்டுமா.... விழா முடிந்ததும் எத்தனை குறைகள் குற்றங்கள் வருகிறது. அது சரியாக இல்லை, இது சரியாக இல்லை என்று. தான் செய்ததை விட மற்றவர் அதிகப்படியாக செய்திருந்தால், அதை மட்டம் தட்டவென்றே ஏதாவது குறைகளை கண்டு பிடித்து சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
பூப்புனித நீராட்டு விழாவைப் பொறுத்த அளவில் அந்த விழாவே அவசியம் இல்லை என்பது எனது கருத்து. அந்த காலத்தில் அதை நம்மவர்கள் செய்தார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. பழைய காலத்தில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்கள். படிக்கவோ, வேலைக்கோ போவதில்லை. எனவே தமது பெண் வயதுக்கு வந்து விட்டாள், திருமணம் செய்யலாம் என்பதை ஊருக்கு அறிவித்தார்கள். ஆனால் இப்போதைய நிலமை அப்படியா? நிலமைக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டாமா? அந்த காலத்தில் பெண்களை படிக்க அனுப்புவது, அல்லது வேலைக்கு அனுப்புவது பாவமாக கருதப்பட்டது. அதுவே நமது கலாச்சாரம் என்று எண்ணி, அதையே தொடர்கிறோமா என்ன? மாற்றம் அதில் ஏற்படுத்திய நமக்கு, இந்த தேவையற்ற விழாவை நிறுத்துவதால் மட்டும் கலாச்சாரம் பழுதுபட்டு போய் விடுமா என்ன?
உண்மையில் வயதுக்கு வரும் குழந்தைக்கு தகுந்த ஆரோக்கியமான ஆகாரங்களை வழங்கி, அவளுக்கு புரிய வைக்க வேண்டிய விடயங்களை புரிய வைத்தால், அதுவே குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாகும். அதை விடுத்து, இந்த அவசியமற்ற விழாவினால் எந்த பலனும் இல்லை. கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் சிந்தித்துப் பார்த்தால் என்ன?
பகுத்தறிவோடு ஒத்துப்போகாத பண்பு ஒரு சமூகப்பண்பாகவோ, அல்லது மனிதப் பண்பாகவோ இருக்க முடியுமா?பூப்புனித நீராட்டுவிழா நடத்துவது அந்த குழந்தைகளுக்கு அவர்களது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லிப் புரியவைப்பதற்கே என ஒரு விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆண்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பருவ மாற்றங்கள் எப்படி புரிய வைக்கப்படுகிறதோ, அதே போல் பெண்களுக்கும் புரிய வைக்கப்படலாம். தவிர விழா எடுக்கும் ஒரே நாளில் புரிய வைக்க கூடிய விடயமில்லை இந்த விடயம். படிப்படியாக பெண்ணின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றத்தை, படிப்படியாகத்தான் குழந்தைக்கு புரிய வைக்க முடியும். இப்படி விழா நடத்துபவர்களில் எத்தனை பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கிறார்கள்? உண்மையில் விழா எடுக்காதவர்கள் இந்த வேலையை திறம்பட செய்கிறார்கள் என்பது எனது கருத்து. தவிர வெளி நாட்டில் வாழும் குழந்தைகளைப் பொறுத்த அளவில், அவர்களுக்கு பாடசாலைப் பாடத்திட்டத்திலேயே எல்லாம் விபரமாக சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை எல்லாம் விழா வைத்துத்தான் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
பூப்புனித நீராட்டு விழா செய்வதன் மூலம், வயதுக்கு வந்த பெண்ணுக்கு தகுந்த கெளரவம் கண்ணியம் வழங்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது. பெண்ணின் உணர்வுகளை மதித்தலிலும், அவளது கருத்துக்கள், செயல்பாடுகளை அங்கீகரித்தலிலும், அவளுக்குரிய கெளரவத்தை கண்ணியத்தை அளிக்க முடியாதா என்ன?
உண்மை கலாச்சாரம் எங்கோ ஒளிந்திருந்து தன்னைத்தானே தேடுகிறது. எளிமையில் இனிமை மறந்தும் போயிற்று. பெருமைக்காய் நிகழ்ச்சிகள் வளர்ந்தும் ஆயிற்று. அநாவசிய செலவுகள் ஆடம்பர கொண்டாட்டங்கள்.கலாச்சாரத்தை கற்று கொடுக்க விளைகையில், அங்கே மனித நேயத்தை அதிகமாய் கலந்து கொடுத்தால் என்ன? அதுதானே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதும், அவசரமானதும். அன்புடன் கலை