Thursday, May 31, 2007

நகரில் அலைந்தோம்!

நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, நாம பரவாயில்லையே என்று தோன்றியது :).

தொடரின் கடைசிப் பகுதியில், கடைகோடித் தமிழன் "இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே" என்று முன்மொழிய, அதை பொன்ஸ் வழி மொழிந்திருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதுவதன் மூலம், அவர்கள் ஆசையையும் கொஞ்சம் பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகின்றது :).

நேற்று மாலை Byen med paraply யில் (Byen med paraply = The town with umbrella = Bergen) வழிகாட்டிகளின் துணையுடன் ஒரு சின்ன Byvandring = town wandering = நகர அலைச்சல் = நகர் உலா :) க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் பேர்கனில் இருப்பவர்களுக்கு நகரத்தில் 'என்னத்தை பெருசா சுற்றிக் காட்டப் போறாங்க' என்று ஒரு சின்ன ஏளனத்தோடு நினைத்தேன். இருந்தாலும், 'அப்படி என்னதான் காட்டுறாங்க பார்ப்போமே' என்ற எண்ணத்தில் போனேன். போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நகர் சுற்றிப் பார்த்து முடிந்ததும், இரவு உணவும் இருக்கு என்று சொல்லியிருந்தார்கள் :). போய் வந்த பின்னர் இத்தனை அருகில் இருந்தும், எவ்வளவு விஷயம் இத்தனைநாள் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.

நேற்று நல்ல காலநிலை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்தும், அந்த நேரத்தில் மழையும், குளிரும் ஆரம்பித்து விட்டது. பேர்கனில் இருந்துகொண்டு மழைக்குப் பயந்தால் முடியுமா என்று விட்டு அனைவரும் நடக்கத் தொடங்கியாச்சு. நல்ல காலநிலையை எதிர் பார்த்திருந்ததால், மழைக்கேற்ற, குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் அணியாததால், குளிரில் நடுங்கி, விறைத்துப் போக வேண்டி வந்து விட்டது. ஆனாலும் வழிகாட்டியின் சுவாரசியமான தகவல்களைக் கேட்டுக் கொண்டே நகர் அலைந்து முடித்தாயிற்று. அந்த சுவாரசியமான தகவல்கள் அடுத்த நோர்வே -7 பதிவில் வரும்.

நம்ம பேர்கன் நகரத்துக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. The city with Rhododenrons. பேர்கன் நகரின் மிதமான காலநிலை, ஈரப்பதன் என்பன இந்த Rhododenrons க்கு மிகவும் உகந்ததாக அமைந்திருப்பதால், வசந்த காலத்தில் இந்த பூக்கள் பேர்கன் நகரின் பல பகுதிகளிலும் சிரித்துக் கொண்டிருக்கும்.



நமது நகர் அலைச்சல் முடிந்ததும், மிக தொன்மையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதியில், வரலாற்றுப் பதிவுகளை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பகுதியில் இரவு உணவை அருந்தினோம்.

சரி வரலாறு அடுத்த பகுதியில் வரும். அப்போ இந்த பதிவு எதுக்கா? சும்மா ஒரு முன்னோட்டம்தான் :).

Monday, May 14, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 6

நோர்வே 6!

வரலாறு

இந்த பகுதியில், முதலில் ரவிசங்கரும் பொன்ஸ் உம் பின்னூட்டத்தில் வரலாறு பற்றி கேட்டிருந்ததுக்கு பதில் சொல்லலாம் என்று யோசிக்கின்றேன். (நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் எனக்கு வரலாறு பாடத்தில் குறைந்த புள்ளிகள்தான் கிடைப்பது வழமை :). அதனால் இதுவும் எப்படி இருக்குமோ தெரியாது. இவர்கள் இருவரும் எனக்கு எத்தனை புள்ளிகள் போடுகின்றார்கள் என பார்க்கலாம்).

ரவிசங்கரின் கேள்வி இதுதான்.....
"உலகளாவிய அமைதி முயற்சிகள்ல நோர்வே தான் முன்னால நிக்குது. இதுக்கு அந்த நாட்டின் வரலாறும் ஒரு காரணம்னு சொல்லுறாங்க..இதப் பத்தி கொஞ்சம் விளக்க முடியுமா?"

நோர்வேயின் உலகளாவிய அமைதி முயற்சிக்கும், நோர்வேயின் வரலாறுக்கும் ஏதாவது நேரடி தொடர்பு இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எதுவும் தென்படவில்லை :). அதனால் இந்தக் கேள்வியை நோர்வேஜியர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் சரியான பதிலை தரவில்லை.

அதே வேளை, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் நோர்வேஜிய மக்கள் அனைவரின் பொதுவான கருத்து அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பங்களிப்பதே என்று கூறியிருக்கிறார். அமைதி முயற்சிகளில் நோர்வே ஆற்றும் தொடர்ந்த பங்குக்கு அவர் 6 விடயங்களை திறவு கோல்களாக கூறுகின்றார்.

1. அரசாங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அமைதி முயற்சிகள் சம்பந்தமான விடயங்களில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது, ஒரு தொடர் நிலையை தக்க வைத்துக் கொண்டிருப்பது.

2. மனிதநேய உதவிகள், அபிவிருத்தித் திட்டங்கள், அமைதி முயற்சிகள் மூன்றிற்கிடையேயும் ஒரு ஒன்றிணைப்பு கொள்கையை கொண்டிருத்தல்.

3. மக்கள் சமூகத்துக்கும், அரச சார்பற்ற நிறுவங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பை பேணி வருவது.

4. அமைதி முயற்சிகளில் ஈடுபடும் இடங்களில் வேறு எந்த சொந்த தேசிய நலனையும் எதிர் பார்க்காமல் செயற்படுவது.

5. UN, NATO, the US, European partners உடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பது.

6. அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நேர்மையான, உண்மையான அக்கறை காட்டுவது.

நோர்வேஜிய வரலாற்றில் எனக்கு தெரிந்த தகவல்களை இங்கே சொல்லி விடுகின்றேன். நோர்வேஜிய மொழி படித்தபோது அவர்கள் சொல்லிக் கொடுத்ததை இங்காவது சொல்லாவிட்டால் எப்படி, அதுதான் :). நோர்வேயின் வரலாற்றுக்கும், நோர்வே அமைதி முயற்சிகளில் முன்னிற்பதற்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா என்பதை ரவிசங்கர்தான் சொல்ல வேண்டும் :).

நோர்வேயில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஜேர்மன், பின்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் குடியேறியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் நோர்வே பல குட்டிக் குட்டி இராச்சியங்களாக இருந்ததாகவும், பின்னர், Harald Fairhair என்பவர் அனைத்து இராச்சியங்களையும் கைப்பற்றி, ஒன்றாக்கி, இணைந்த நோர்வேயின் முதல் அரசனாக வந்தார்.

வீக்கிங் காலம் (Viking Age) என அழைக்கப்படும் 8 - 11 நூற்றாண்டில் நோர்வேஜிய வீக்கிங் மக்கள் கப்பலில் பல நாடுகளுக்கும் வர்த்தக நோக்கங்களுக்காக சென்று (கொள்ளையடித்து :)), வெவ்வேறு நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வீக்கிங் மக்கள் விட்டுச் சென்ற சரித்திரப் பதிவாக, அண்மைய காலம்வரை நோர்வேயில் கப்பல் கட்டும் தொழில் மிகவும் பிரசித்தமானதாய் இருந்தது.

1349 இல், ஏற்பட்ட ஒரு பாரிய நோய்த் தாக்கத்தால் நோர்வேயின் சனத்தொகையில் 40-50 % மக்கள் இறந்தார்கள். இந்த காலத்தை 'Black period' என்று அழைக்கின்றார்கள். Black death or Black Plague என்றறியப்பட்ட இந்த அதி வேகமாகப் பரவிய நோய் உலகின் பல பாகத்திலும் பெருத்த சேதத்தை, மக்கள் இறப்பை ஏற்படுத்தியது.

இதன்போது நோர்வே பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது. அதன் பின்னர் நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டன. பின்னர் ஸ்வீடன் சுதந்திரம் பெற்று பிரிந்து சென்றிருந்தும் சில காலம் டென்மார்க்கும் நோர்வேயும் இணைந்தே இருந்தன. நெப்போலியன் காலத்தில் ஏற்பட்ட போரின் பின்னர் மே 17, 1814 இல் நோர்வே சுதந்திர நாடாக இருப்பதற்கான அரசியல் யாப்பை உருவாக்கி, சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. ஆனாலும் ஸ்வீடன் பலாத்காரமாக நோர்வேயை தன்னுடன் இணைத்து தனது இராச்சியத்தின் கீழ் வைத்திருந்தது.

1840 ஆம் ஆண்டளவில், நோர்வேஜியருக்கென தனிப்பட்ட கலை கலாச்சாரத்தை பேணுவதற்கென ஒரு அமைப்பு உருவானது. அந்த அமைப்பு Norwegian romantic nationalism என அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு நோர்வேக்கு என தனிப்பட்ட தேசிய அடையாளத்தை கொடுக்கக் கூடிய இலக்கிய, ஓவிய, இசை, மற்றும் மொழி சம்பந்தமான கொள்கைகளை வகுத்துக் கொள்ள உதவியது. Edvard Greig என்பவர், உலகில் பிரபலமான ஒரு இசையமைப்பாளர்களுள் ஒருவர். அவர் தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்த வீடு, அவரது பொருட்கள் நிறைந்த பொருட்காட்சிச்சாலை தற்போது பேர்கனில் (நான் வாழும் நகரத்தில்), Trollhaugen என்னுமிடத்தில் சுற்றுலாத் தலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அவரது வீடு இயற்கை அழகு நிறைந்த ஒரு இடத்தில், கடலுடன் நெருங்கி அமைந்திருக்கிறது. இந்த இடம் பார்த்து வந்ததும் ஒரு இனிமையான அனுபவமே.

1905 இல் ஸ்வீடனிடம் இருந்து, அமைதியான முறையில் நோர்வே பிரிந்து தனியாகி விட்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில், நோர்வே எந்த ஒரு பக்கச் சார்பையும் எடுக்காது இருந்தபோதும் (முதலாம் உலகப் போரில் போன்றே), 1940 இல் ஜேர்மனியப் படைகள் நோர்வேயை முற்றுக்கையிட்டன. நோர்வே இந்த தாக்குதலை எதிர் பார்த்திருக்காவிட்டாலும், 2 மாத காலத்துக்கு அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டது. இந்த காலமே ஜேர்மன் படைகள் தாம் சென்ற நாடுகளில் எதிர்ப்பை சந்தித்த அதி கூடிய காலமாக இருந்தது. ஜேர்மன் படைகளின் முற்றுக்கையின்போது நோர்வேயிடம் இருந்த கடற்படையே உலகின் 4 வது பெரிய கடற்படையாக இருந்தது. ஐந்து வருடங்களின் பின்னர் சரித்திரத்தின் தற்செயல் நிகழ்வாக, 1945 மே 8 ஆம் திகதி (அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினத்திற்கு 9 நாட்கள் முன்னதாக) நோர்வேயில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து, ஜேர்மனிய படைகள் சரணடைந்தன. ஆனாலும் மே 17 நாளே இங்கே கோலாகாலமாக கொண்டாடப்படுகின்றது. (ஒரு வழியாக மே 17 க்கு 3 நாட்கள் இருக்கும்போது எனது பதிவை நிறைவு செய்யப் போகின்றேன் :) ).

1949 இல் நோர்வே NATO வில் இணைந்தது. 1960 களில் பெற்றோலிய பொருட்கள் கண்டறியப்பட்ட பின்னரே, நோர்வேயின் பொருளாதாரத்தில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது பற்றி எடுக்கப்பட்ட இரு பொதுமக்கள் வாக்களிப்பில் (1972 இலும் 1994 இலும்), மக்களால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில்லை என்ற முடிவு பெறப்பட்டது.

அப்பாடா, ஒரு மாதிரி வரலாறு கொஞ்சம் சொல்லியாச்சு :).

மொழி

முக்கியமாக இரு சம அந்தஸ்து கொண்ட நோர்வேஜிய மொழிகள் அரசாங்க மொழிகளாக இருக்கின்றன. Bokmål and Nynorsk. ஆனாலும் Bokmål தான் அதிகளவு பாவனையில் உள்ளது. பொதுவாக வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதும் இதுதான். தற்போது Nynorsk இன் பாவனையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் பெரிய வேறு பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதனால் மக்கள் பேசும்போது புரிந்து கொள்வதில் பல நேரங்களில் தடுமாற்றம் இருக்கின்றது.

இது விடயமாக நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நான் இங்குள்ள பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலமது. செய்முறை வகுப்புக்களுக்கு தவறாமல் போகும் நான், theory வகுப்புக்கு போக சோம்பல்படுவேன். அதுவும் காலை வேளையில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இந்த குளிரில் எழுந்து போய் என்ன செய்வது என்று விட்டு விடுவேன். ஒரு சமயம் நோர்வேஜிய மொழியில் ஒருவர் பாடம் நடத்திக் கோண்டிருந்தார். அவர் பேசியது எதுவுமே (ஒரு வரி கூட) எனக்கு புரியவில்லை. பாடம் முடிந்த பின்னர் அருகில் இருந்த நோர்வேஜிய மாணவனிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை என்று கவலையுடன் கூறினேன். அவன் சொன்னான் "கவலை வேண்டாம். எனக்கும்தான் புரியவில்லை. காரணம் அவர் நோர்வேயின் அதி வடக்கில் ஒரு இடத்தில் இருந்து வந்து, அங்கே பேசப்படும் பேச்சு வழக்கில் பேசுகின்றார்". எனக்கோ பெரிய திருப்தி. :)

நோர்வேஜிய மொழிக்கும், ஸ்வீடன், டென்மார்க் மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாசிக்கும்போதோ, அல்லது அவர்கள் பேசும்போதோ ஓரளவுக்கு அவற்றை புரிந்து கொள்ள முடியும். இது சம்பந்தமாகவும் ஒரு அனுபவம். ஒரு தடவை பயிற்சி வகுப்பொன்றில், என்னைப் போலவே ஒரு வெளி நாட்டவர் (ஈரான்) என்னுடைய குழுவில் இணைந்திருந்தார். அவர் மிக விரைவாக பேசிக் கொண்டு போனார். அவரிடம் நோர்வே வந்து எவ்வளவு காலம் என்று கேட்டேன். அவர் மூன்று மாதங்கள் என்றார். நான் வந்து ஒன்றரை வருடத்துக்கும் மேலாகி விட்டிருந்தது. எனவே நான் அவரிடம் "மூன்று மாதத்திலேயே நீங்கள் நன்றாக நோர்வேஜிய மொழியை பேசுகின்றீர்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர் "நான் பேசுவது நோர்வேஜிய மொழியல்ல, ஸ்விடிஷ் மொழி. நான் பல வருடங்களாக ஸ்வீடனில்தான் வசிக்கின்றேன்" என்றார். மொத்தத்தில் எனக்கு நோர்வேஜிய மொழியும் தெரியவில்லை, ஸ்வீடிஷ் மொழியும் தெரியவில்லை :). அனேகமாக இங்கிருக்கும் ஸ்வீடிஷ் மக்கள் நோர்வீஜிய மக்களுடம் பேசும்போது, தங்கள் சொந்த மொழியிலேயே பேசுவார்கள், இவர்களும் புரிந்து கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளின் வேறு பட்ட மொழிகளிலும் கூட பல சொற்கள் ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். சில சொற்கள் ஒரே எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் உச்சரிப்பு விதத்தில் வேறுபாட்டை கொண்டிருக்கின்றன.

இந்த இரு மொழிகள் தவிர்ந்த இன்னுமொரு மொழியும் நோர்வேயில் உள்ளது. Sami languages என்றழைக்கப்படுகின்றது. அந்த மொழியை பேசுபவர்கள் அதிகமாக நோர்வேயின் வட பகுதியில் வசிக்கும் பழங்குடியினர். பழைய வரலாற்றுடன் தொடர்புடையவர்களாக கருத்தப்படும் இவர்களுக்கு தனிப்பட்ட கலை கலாச்சார வடிவங்கள் இருக்கின்றன. அந்த மொழியும் அரசாங்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளும் உரிமையும், அங்கீகாரமும் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

சில ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், நோர்வேஜிய மக்கள் வெளி நாட்டவருடன் ஆங்கிலத்தில் உரையாடுவதில் தயக்கம் காட்டுவதில்லை. அதனால் ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதுமானது.

இங்கே முக்கியமாக கற்பிக்கப்படும் வெளிநாட்டு மொழிகள் ஆங்கிலம், ஜேர்மனிய மொழி, French மொழி. இந்த மூன்று மொழிகளிலும், அத்துடன் டனிஷ் (Danish), ஸ்வீடிஷ் (Swedish) ஆகிய இரு ஸ்கண்டினேவிய மொழிகளிலும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்தவும், எந்த பாடத்துக்கான பரீட்சைகளையும் அந்த மொழிகளில் எடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகின்றார்கள்.

அது மட்டுமல்ல, எந்த ஒரு மாணவரும், தனது மேல்நிலைப்பள்ளி படிப்பின் இறுதியில் தனது தாய்மொழியையும் ஒரு பாடமாக எடுக்க அனுமதிக்கப் படுகின்றார். அதற்குரிய புள்ளிகள் அவரது மேல் படிப்பு சம்பந்தமான தேவையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. சில நகரங்களில், பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் தாய்மொழி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், பிரத்தியேக வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அதற்காக குறிப்பிட்ட மொழிகளில், குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.

மதம்

Norse or Scandinavian mythology எனப்படும் ஒரு பழங்கால மதவழியை ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் பின்பற்றி வந்தார்கள். பின்னர் அனேகமானோர் கிறிஸ்துவர்களாக ஆனார்கள். ஆனாலும் பலரும் மதத்தில் அதிகமான ஈடுபாடு வைத்திருப்பதில்லை என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. தேவாலயத்துக்கு முறையாக போகின்றவர்கள் மிகவும் அரிது. Baptism, Confirmation (தமிழ் சொற்கள் தெரியவில்லை), திருமணம், இறப்பு போன்ற தருணங்களிலேயே மதச் சடங்குகள் நடை முறைப் படுத்தப் படுகின்றன. எல்லோரும் இதை கைப்பற்றுவதுமில்லை. அனேகமானோருக்கு திருமணம் பதிவு செய்யும் அலுவலகத்திலேயே முடிந்து விடும். வெவ்வேறு வகையான கிறிஸ்தவ அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக இஸ்லாம் மதம் (1.5 %) இருக்கின்றது. அதற்கும் அடுத்த நிலையில் இந்து மதத்தினர் இருக்கின்றார்கள். புத்த மதமும், இன்னும் சில மதங்களிலும் ஈடுபாடு கொண்ட சிறிய சனத்தொகையும் இருக்கின்றது. சிறிய அமைப்புக்களாக இருந்தாலும், எல்லா மதத்தினருக்கும் சகல, உரிமையும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

முடிவு

இத்துடன் நோர்வே பற்றிய எழுத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று எண்ணுகின்றேன். :)

வடுவூர் குமார் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அதனால் அவரை சிங்கப்பூர் பற்றி எழுத அழைக்கின்றேன். இந்தியா பற்றியும் யாராவது எழுதலாமே. அதற்கு பொன்ஸ் ஐ அழைக்கலாம் என்று பார்க்கின்றேன். :) எனது இந்த 'நாடு நல்ல நாடு' பதிவை தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்ட களத்து மேடு எந்த நாட்டில் இருக்கின்றார் என்று தெரிந்தால், அவரையும் அவர் வாழும் நாட்டைப்பற்றி எழுத அழைக்கலாம். :)

நிறைவு

Wednesday, May 09, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 5

நோர்வே 5

முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன்.

நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் அமைந்திருக்கின்றன. இந்த தீவுக் கூட்டம் வடதுருவத்துக்கும், நோர்வேயின் பெரு நிலப்பரப்புக்கும் இடைப்பட்ட தூரத்தின் நடுப்பகுதியில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் இருக்கின்றது.

இந்த உருகும் பனி மலைகளில் இருந்து உருகி ஓடும் நீர் தேங்கி நிற்கும் ஏரிகள் குடிநீர் சேகரிப்புக்கான இடங்களாக பயன்படுகின்றன. Isbre என்ற பெயர் கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரானது உலகளவில் பெரு மதிப்பை பெற்றுள்ளது.

இந்த குடிநீரானது United States Patent and Trademark இடம் "The World's Best Drinking Water"® என்ற அடையாளத்தையும், EU trademark இடம் "Isbre-The World's Best Drinking Water"® என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. இந்த குடிநீர் பெறப்படும் இடம் ஹடங்கர் (Hardanger) என்ற, பேர்கனுக்கு அண்மையாக உள்ள இடமாகும். கிட்டத்தட்ட 100 மைல் நீளமான கடல் நீரேரியின் முடிவில் அமைந்திருக்கும் நீர்த்தேக்கத்தில் இருந்து பெறப்படும் இந்த குடிநீர் மிகவும் தூய்மையானதாக கருதப் படுகின்றது.


காரணம் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து அதி தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்திருப்பதால், செயற்கையான அசுத்தப் படுத்தல், மாசுபடுத்தல் எதுவுமற்று இருக்கின்றது. இந்த இடத்தை சுற்றிலும், பழ மரங்கள் நிறைந்த மலைகள், கடல் நீரேரிகள், நீர் வீழ்ச்சிகள் என்ற அழகான இயற்கை அம்சம் நிறைந்த விடயங்களே காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் நிரந்தர குளிர் காலநிலையால், குறைந்த வெப்ப நிலையில் இயற்கையான இரசாயன மாற்றங்கள் நடை பெறுவதும் தவிர்க்கப்படுகின்றது. இந்த நீரை உருவாக்கும் உருகும் பனிநிலைகள் 5,000 - 10,000 வருடத்துக்கும் பழமையானவையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.

உப்பு, கனிமங்கள், உலோகப் பொருட்களின் கலப்படம் எதுவுமற்ற, மிகத் தூய்மையான நீரை எடுக்க முடிகின்றது. இந்த நீரை பிறந்த குழந்தைக்கு கூட கொதிக்க வைக்காமல் கொடுக்கலாம் என்று சொல்கின்றார்கள். (ஆனால் குழந்தை விடயத்தில் நான் அந்த risk எடுக்கவில்லை :) ).

அழகின் ஒரு முக்கிய பகுதி :)

முந்தைய பதிவில் இன்னொரு இயற்கை அழகை குறிப்பிட மறந்து விட்டேன். பல நீர் வீழ்ச்சிகளை ஆங்காங்கே கொண்டிருக்கும் நீண்ட பள்ளத் தாக்கு. பேர்கனில் இருந்து அதிக தொலைவில் இல்லாத Fløm valley க்கு சென்று வந்தது மறக்க முடியாத இனிமையான அனுபவம். உயரமான மலைத் தொடர்களில் இருந்து மலையடிவாரத்துக்கு செல்ல பஸ் உம், புகையிரதமும் உண்டு. வளைந்து வளைந்து (spiral hairpin turns) செல்லும் பாதையில், பள்ளத்தாக்கை நோக்கி போவதும், அங்கிருந்து மேலே வருவதும், வழி முழுவதும் அழகான நீர் வீழ்ச்சிகளை கண்டு களிப்பதும் இனிமையாக இருக்கும். போகும் வழியில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் நீர் வீழ்ச்சியின் உள்ளிருந்து வருவதுபோல் இரு பெண்கள் வந்து பாடலுக்கு நடனமும் ஆடுவார்கள். பள்ளத்தாக்கு இருப்பது Fløm என்ற இடத்தில் மக்கள் வசிக்கின்றார்கள். அங்கே மூன்று தினங்கள் தங்கி, அந்த இடத்தின் அழகை முழுமையாய் அனுபவித்துவிட்டு வந்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.






Tuesday, May 08, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 4

நோர்வே - 4!

நோர்வே நாடானது உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும் :) ).




ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice age) முடிவில் ஏற்படுத்தப்பட்ட உருகும் பனிநிலைகள் (glaciers), கடல்நீரேரிகள் (fjords), நீர்வீழ்ச்சிகள் (waterfalls) போன்ற இயற்கை தன் அழகை காட்டி நிற்கும் இடங்கள் தன் வசப்படுத்தி உள்ளதால், மக்கள் வாழும் நிலப் பரப்பின் அளவு குறைவாகவே உள்ளது. மலைகள், உருகும் பனிப்பாறைகள், கடல் நீரேரிகள் என்பவற்றின் அழகே அழகு.



Glaciers: பனிப்பாறைகளில் மலையேற்றம் செய்பவர்களைப் பாருங்கள்.





Fjords: கடல் நீரேரிகளின் அழகைப் பாருங்கள். இந்த கடல் நீரேரிகளின் ஊடாக கப்பலில் செல்வது எத்தனை இனிய அனுபவம்.




நோர்வேயின் கரையோரப் பகுதிகளில், உள் நோக்கி இழுக்கப்பட்ட கடல்நீரேரிகளின் கரை, சிறு தீவுகளின் கரை என்று பார்த்தால், அவற்றை நீட்டி ஒரு கயிறு மாதிரி இழுத்தால் கரையின் நீளம் 25,000 km வரை வரும்.

நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள இடங்களில் சில (கிட்டத்தட்ட வடக்கில் மூன்றில் ஒரு பகுதி) ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்திருக்கிறது.




அதனால் குளிர் மிக அதிகமாக இருப்பதுடன், அழகான நடு இரவுச் சூரியனைக் காணக் கூடியதாகவும் இருக்கிறது. 'நடு இரவுச் சூரிய நாடு' என்ற பெருமையை அடைகின்றது.

Midnight sun: நடு இரவில் இப்படி சூரியனைப் பார்த்தால் எத்தனை மகிழ்வாக இருக்கும்.

இன்னும் ஒரு அழகு வடதுருவ ஒளி (Northern Light) தெரிவது. வட துருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு ஒளியின் அபூர்வத் தோற்றமே இந்த வடதுருவ ஒளி எனப்படுவது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித் தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். இதை இயற்கையின் வாணவேடிக்கை என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாக, கற்பனையால் மெருகூட்டிச் சொல்லலாம். இந்த அழகை நேரில் பார்ப்பவர்கள், இந்த அழகை வார்த்தைகளால் விபரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள். நான் பார்க்கவில்லை. :(





நான் வாழும் பேர்கன் (Bergen) நகரம் பற்றியும் சொல்லி விடுகின்றேன். நோர்வேயின் தலை நகரம் ஒஸ்லோ விற்கு அடுத்ததாக பெரிய நகரம் பேர்கன் நகரம். மிகவும் அழகான இடமும் இதுவாக இருப்பதால், உல்லாசப் பயணிகளுக்கு (வெளி நாட்டுக்கு, உள்நாட்டுக்கு) உகந்த இடமாக அமைந்திருக்கிறது. இது பழைய தலை நகரமாகவும் இருந்திருக்கிறது.


இந்த நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன் கடல் நீரேரிகளுக்கான வாசலாகவும் (Gateway to fjords) அமைந்துள்ளது. ஒரு மலையில் ஏறி, மலையேற்றம் மூலம் நடந்தே அனைத்து மலைகளையும் கடந்து வருவது பேர்கன் வாழ் மக்களில் பலரின் சிறந்த பொழுது போக்கு. மலையேற விருப்பமில்லாதவர்கள் வாகனத்திலும் போகலாம். ஒரு மலைக்கு cable bus வசதியும், இன்னொரு மலைக்கு cable car வசதியும் உண்டு.




பேர்கனைப் பற்றிய இன்னொரு தகவல். அந்த நகரத்தை 'குடையுடன் கூடிய நகரம் (Byen med paraply)' என்று செல்லமாக அழைப்பார்கள். காரணம் ஐரோப்பிய நகரங்களில் அதிக மழை பெய்யும் நகரம் இதுவே. ஒரு வருடத்தில் அதி குறைந்ததாக 200 நாட்கள் மழை பெய்யும். அதனால் நகரம் எப்போதும் குளித்து மிகவும் சுத்தமாக இருக்கும். :). சில நாட்கள் மழை தொடர்ந்து இலாவிட்டால் பேர்கன் வாழ் மக்களுக்கு கவலை வந்து விடும். இதை பார்த்தால் பேர்கனில் பெய்யும் மழை நிலவரம் தெரிய வரும். பேர்கன் இத்தனை அழகான நகரமாக இருந்தும் பலர் இங்கு வந்து வாழ்வதில் விருப்பம் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இந்த மழையின் அளவுதான். :(

நோர்வேயின் அழகை வர்ணித்தாயிற்று. அடுத்த பதிவில் இன்னும் சில விடயங்களை சொல்லி விட்டு நிறைவு செய்து விடலாம் என்றிருக்கிறேன்.

Monday, May 07, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 3

நோர்வே 3!

நோர்வே பற்றிய எனது முதலாவது பதிவின் இறுதியில் நோர்வேயின் காலநிலை பற்றி எனது புதிய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்வதாக எழுதி இருந்தேன். பிறகு gl இன் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதால் அடுத்த பதிவில் அதுபற்றி எழுதவில்லை. இப்போ எழுதுகின்றேன்.

நான் நோர்வேக்கு வருவதற்காக விமானத்திற்காக Netherland Amsterdam விமான நிலையத்தில் காத்திருந்தபோது, ஒரு வயது முதிர்ந்த நோர்வேஜிய மனிதர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடியதால், மொழிப் பிரச்சனை இருக்கவில்லை. மிகவும் நட்பாக அவர் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நோர்வே பற்றிய ஒரு பாதுகாப்பு உணர்வையும் தந்தது.

நான் நோர்வேயில் கால் பதித்த நாள் நோர்வே தொடர்ந்த, இடை விடாத பனிமழையில் சில நாட்களாய் குளித்து, குளிர்ந்து, நடுங்கிக் கொண்டிருந்த ஒரு நாள். அன்று நான் தற்போது வாழும் நகரான பேர்கன் (Bergen) நகரத்தில், அதி கூடிய பனிமழை காரணமாக விமான நிலையமே மூடப்பட்டிருந்தது. நான் தலைநகரான ஒஸ்லோ விமான நிலையத்தில் தரையிறங்கினேன். தரையில் எங்கே இறங்கினேன், ஸ்னோவில் இறங்கினேன். :)


நோர்வேயை அண்மித்ததும் பைலட், பனிமழை காரணமாக ஓடுபாதை சீரற்று இருப்பதால் தற்போது விமானத்தை தரையிறக்க முடியாது என்றும், அதனால் வானத்தில் வட்டமடிக்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பை செய்தார். பனிமழையின் பாதிப்பு எப்படி என்று சரியாக புரியாததால், 'சரி ஏதோ பிரச்சனை. இறக்கும்போது இறக்கி விடட்டும்' என்றெண்ணிக் கொண்டு கண்ணை மூடி, இருக்கையில் சாய்ந்து கொண்டேன். பின்னர் இங்கே ஸ்னோவில் வழுக்கி விழவேண்டி வந்த நேரத்தில்தான் உண்மையான பிரச்சனை புரிந்தது :). இலங்கை நேரத்துக்கு தூக்கம் கண்ணை அள்ளிக் கொண்டு போனதில், அப்படியே உறங்கியும் போய் விட்டேன். மீண்டும் விமானம் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு வந்தபோது எழுந்து நேரத்தைப் பார்த்தால், அரைமணித்தியாலம் கடந்து விட்டிருந்தது. அரை மணித்தியாலத்திற்கும் மேலாக வானத்தில் வட்டமடித்தபடி இருந்திருக்கிறோம்.

கீழே வந்து இறங்கிய போதும், அதே வயதான மனிதர் எனது பொதிகளை எடுப்பதில் உதவி செய்தார். என்னால் தூக்க முடியாத அளவு பாரமுள்ள பொதியை அல்லவா (மேலதிக கட்டணமாக பணம் செலுத்தி எடுத்து வந்த பொதிகளை:)) அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்தேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், வெள்ளைக்கம்பளம் விரித்து ஒஸ்லோ வரவேற்றது. அந்த ஸ்னோவை தொட்டுப் பார்த்த பின்னர்தான் ஸ்னோ இதுதான் என்பது சரியாக புரிந்தது. கற்பனையில் நான் அறிந்த ஸ்னோ போலில்லாமல், மெதுமையாக இருந்தது. குளிருக்கு ஏற்ற உடை முதலே அணிந்திருந்ததால், குளிரை அதிகம் உணரவில்லை. அன்றும், தொடர்ந்த மூன்று நாட்களுக்கும் பேர்கனுக்கான புகையிரத சேவைகளும், பனி காரணமாய் இரத்துச் செய்யப் பட்டு இருந்ததால், ஒஸ்லோவில் சினேகிதர்களுடன் தங்க வேண்டி வந்தது. நோர்வே வந்த புதிதில், குழந்தையாய் மாறி ஸ்னோவில் விளையாடியது மறக்க முடியாதது. ஸ்னோ அடித்து ஓய்ந்த பின்னர், மரங்கள் எல்லாம் பெரிய பெரிய வெள்ளைப் பூங்கொத்துகளாக காட்சி அளிப்பது கொள்ளை அழகு.


ஆனால் இந்த அழகு ஆபத்தாய் முடியும் சந்தர்ப்பங்கள்தான் சங்கடமானவை. பனிமழையைத் தொடர்ந்து மழை பெய்து, ஸ்னோ இறுகிப்போய், பாதைகள் எல்லாம் வழுவழுக்கும் கண்ணாடியாய் மாறி இருக்கும்போது, நடனம் ஆடிக்கொண்டே நடக்க வேண்டி வந்து விடுகின்றது. வழுக்கி விழுந்து எழும்ப வேண்டியும் வருகின்றது. நாங்கள் மட்டும் விழுந்து எழும்பவில்லை. நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மக்களே கூட சிலர் விழுந்து எலும்பை முறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கையில் நாம் எம்மாத்திரம்? அப்படி நாட்களில் விபத்துக்கள் அதிகம் நடந்து வைத்தியசாலைகள் நிரம்பி விடுவதுமுண்டு.

வடபகுதியில். சில சமயம் பெரும் பனிமழையின் பின்னர், வீட்டின் கதவுகளை முற்றாக மூடி பனி கொட்டி இருப்பதும், கதவை திறந்து கொண்டு மக்கள் வெளியே வர முடியாமல் இருப்பதும் நடக்கும். அப்படி சந்தர்ப்பங்களில் காவல்நிலையத்துக்கோ, அல்லது தீயணைக்கும் பிரிவினருக்கோ, தொலைபேசி மூலம் தகவல் அனுப்பி, அவர்கள் வந்து பனியை அப்புறப்படுத்தி, அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியதிருக்கும்.

நோர்வே வந்த முதல் நாள் அதிகாலையில் 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. 6 மணி வரை படுக்கையிலேயே படுத்திருந்தேன். யாரும் எழுவதாயில்லை. போய் குளித்து விட்டு வந்தேன். அப்போதும் யாரும் எழுவதாயில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். புத்தகமும் வாசித்து முடிந்து விட்டது. 3 மணித்தியாலமும் கடந்து விட்டது. அப்போதும் யாரும் எழுவதாயில்லை. வெளியே பார்த்தால் இன்னும் இருள். அடுத்த புத்தகத்தை எடுத்து வாசித்தேன். ஒரு வழியாக 11 மணியளவில் ஒவ்வொருவராய் எழுந்து வந்தார்கள். அன்று விடுமுறை நாள், அதனால் அப்படி எழுந்ததாகச் சொன்னார்கள். வெளியே இருள் மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. அப்படியே சில மணி நேரம் கடந்த பின்னர், 3 மணி போல், மீண்டும் இருள் கவிய ஆரம்பித்தது. எனக்கு இருள் பிடிப்பதில்லை. இவ்வளவு நேரம் இருளாய் இருந்தால் என்ன செய்யப் போகின்றேன் என்று முதல் முறையாய் பயப்பட ஆரம்பித்தேன்.

இருள் பற்றி நான் சோகமாக சொன்னபோது மற்றவர்கள் சிரித்தார்கள். நோர்வேயின் வடபகுதியில் குளிர் காலத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் அளவில் முழு இருளிலேயே வாழ்கின்றார்கள் என்று சொன்னார்கள். அங்கு வாழும் தமிழர்கள், மாலை 2-3 மணிக்கு, திறந்த வெளியில் கூட மின்சார ஒளியில்தான் கிரிக்கெட், கால் பந்து எல்லாம் விளையாடுவார்களாம். வட பகுதிகளில் இந்த குளிர்காலம் 6 மாத காலம் கூட நீடிக்கும். நோர்வேயில் குளிர் காலத்தில் (winter season) பகல் நேரம் என்பது ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே. டிசம்பர் 21 ஆம் திகதி அதி கூடிய இரவைக் கொண்ட நாள்.

அதுவே கோடை காலமாயின் (summer season), நாள் முழுமைக்கும் தொடர் வெளிச்சம்தான். ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே இரவாக இருக்கும். இரவு 11-12 மணி வரையில்தான் இருள ஆரம்பிக்கும். மீண்டும் அதிகாலை 2 மணிக்கு வெளிச்சம் வர ஆரம்பித்து விடும். அதிகூடிய பகல்நாள் ஜூன் 21 ஆம் திகதி வரும். அன்று அதை சிறிய கொண்டாட்டமாக வைத்துக் கொள்வார்கள். எங்கள் ஊரில் இந்துக் கோவில்களில் சிவராத்திரிக்கு, பெரிய கோபுரம் போல் கட்டி, அதை எரிப்பதுபோல், பல ஊர்களிலும் ஜூன் 21 ஆம் திகதி அன்று, பலகைகளால் ஆன கோபுரம் செய்து அதை எரிப்பார்கள். நோர்வேயின் வடக்குப்பகுதி ஆர்க்டிக் வட்டத்தினுள் வருகின்றது. அங்கே முழுநாளும் பகல்தான். அதனால் நடு இரவுச் சூரியனை கண்டு களிக்கலாம். நான் இன்னும் நோர்வேயின் வட பகுதிக்கு போனதில்லை. அங்கே போவதற்கு அதிக செலவாகும். கிட்டத்தட்ட அந்த செலவில் எவ்வளவோ தூரத்தில் இருக்கும் நம்ம ஊரை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்பதால் வடநோர்வே பயணம் பின் போடப்பட்டுக் கொண்டே போகின்றது :).

அழகு நிறைந்த கடல்நீரேரிகளை (fjords தமிழ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறானால் திருத்தி விடுங்கள்) கொண்ட உலகத்தின் பகுதிகளில் நோர்வேயும் ஒன்று. எனது அடுத்த பதிவில் நோர்வேயின் அழகுபற்றி எழுதுகின்றேன்.

Friday, May 04, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 2

நோர்வே - 2

முந்தைய எனது பதிவில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் நோர்வேயும் ஒன்றா என்ற கேள்வியை gl கேட்டிருந்தார்.

நீண்ட காலமாக கப்பல்துறை நோர்வேயின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை கொண்டிருந்தது. ஆனால் நோர்வேயின் இயற்கை வளங்களே தற்போதைய அதி உயர் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. பெற்றோலிய வளமும், நீர்மின்னியல் சக்தி, மீன் வளமும் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நோர்வே பொருளாதாரத்தில் பாலுற்பத்தி உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பில் வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.

நோர்வேயில் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாகவே உள்ளது. பெற்றோலும், மீனும் கூட, நோர்வே அவற்றை ஏற்றுமதி செய்து அனுப்பும் நாடுகளில் உள்ள விலையை விட அதிகம் என்றால் பாருங்களேன் :). அமெரிக்காவின் வாழ்க்கைச் செலவை விட 30% அதிகமாக நோர்வேயில் வாழ்க்கைச் செலவு இருக்கின்றது என்று ஒரு கணிப்பீடு சொல்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக, நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக கருதப் படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான சில கூட்டு முயற்சிகளில் பங்கேற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முழுமையாக நோர்வே இணைந்து கொள்வதை நோர்வேஜிய மக்கள் விரும்பவில்லை என்பதை ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்.

தனி மனிதனுக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product per capita, or GDP per capita) உலக நாடுகளில்
இரண்டாவது இடத்தை நோர்வே கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வேலையில்லாப் பிரச்சனை மிகவும் குறைவாகவே (3% ஐ விட குறைவு) உள்ளது. அத்தோடு, நோர்வேஜிய சமூகம் வேலைக்கான ஊதியத்தில் மக்களிடையே அதிக வேறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்கின்றது. அதி குறைந்த ஊதியம் பெறுபவருக்கும், அதி கூடிய ஊதியம் பெறுபவருக்கும் இடையில், நிகர வருமானத்தில் (net income) வேறுபாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. (அதிகம் உழைத்தால் வரியை கூட்டோ கூட்டென்று கூட்டி, ஒரு வழி:) )க்கு கொண்டு வந்துடுவாங்க.

குழந்தைகளுக்கான உரிமை, நலன், மற்றும் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் நலனை பேணிப் பாதுகாப்பதிலும் நோர்வே முன்னணியில் இருக்கின்றது. தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. தவறு செய்பவர்களுக்கு, சட்ட நடைமுறைகள் முடிந்து, அதிகார பூரவமாக தண்டனை தீர்ப்பு வரும்வரை, எந்த ஒரு தண்டனையும் வழங்கப்படக் கூடாது என்று சட்டம் இருக்கின்றது. (அட சிறிய தவறுக்கு கிடைக்கும் சிறிய தண்டனைகளில், தண்டனைக்கு உட்படுபவரே எந்த நாட்களில் சிறையில் இருப்பது என்பதை தீர்மானிக்க அனுமதிக்கப்படுவார். வெளியிலே இருக்கிறது bore அடிச்சா, உள்ளே போய் சில நாட்கள் இருந்து விட்டு வரலாம், ஹி ஹி. சிறையில் தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி உட்பட எல்லா அடிப்படை (???) வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றதாம். உடனே நான் அங்கே இருந்து பார்த்தேனா ன்னு கேட்காதீங்க. எல்லாம் காது வழி கேட்ட செய்திதான்).

அட, நான் என்னவோ 'நடு இரவுச் சூரியன்' பத்தி எழுதுறதா சொல்லிட்டு, என்னென்னவோ எழுதிக்கொண்டு போகின்றேன். சரி விடுங்க. அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Thursday, May 03, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 1

நோர்வே - 1

நாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத ரவி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எழுத வேண்டும் என்று நினைப்பதிலேயே நாட்கள் கடந்து விட்டது.

மே 17 ஆம் திகதி
நோர்வே நாட்டின் 'அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினம்' (Constitutional Day) அல்லது தேசிய தினம் (National day) வருகின்றது. அதற்கு முன்னராவது நாம் வாழும் நாடுபற்றி எப்படியாவது எழுதி விட வேண்டும் என்று எழுதுகின்றேன். நாம் வாழும் நாட்டுக்கு ஒரு மரியாதை செய்ததாக இருக்கட்டுமே :).

நோர்வேயைப்பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடிய விஷயம் ஒன்றுள்ளது. நோர்வே உலக நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீட்டின்படி, மாந்த வளர்ச்சிச் சுட்டெண்
[The Human Development Index (HDI) ] முதலாம் இடத்தில் இருக்கின்றது. இந்த HDI ஆனது, வாழ்க்கைத் தரம் (standard of living), சராசரி மனித வாழ்க்கைக் காலம் (average life expectancy), எழுத்தறிவு (literacy), தலைக்குரிய வருமானம் (per capita income) போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப் படுகின்றது. 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நோர்வே இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயானது நோர்வே இராச்சியம் (The Kingdom of Norway) என்றே அழைக்கப்படுகின்றது. இங்கே அரச பரம்பரையினர் இருந்தாலும், அவர்களிடம் அதிகாரங்கள் இல்லை. அரசியல் அமைப்பு பாராளுமன்ற முறையிலேயே அதிகாரங்களை கொண்டிருக்கின்றது. அரச பரம்பரையினர், விசேட நாட்களில், முக்கியமாக மே 17 அன்று, நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் இருக்கும் தங்களது மாளிகையின் (Royal House) மொட்டை மாடியில் நின்று மக்களை நோக்கி கையசைப்பார்கள். மக்களும் அன்றைய தினத்தில் அரச பரம்பரையினரை பார்வையிடுவதையும் அங்கு நடைபெறும் ஊர்வலங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதையும் வழமையாகக் கொண்டுள்ளனர். அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக இந்த அரச பரம்பரையினர் அறியப்படுகின்றார்கள்.

மே 17 ஆம் திகதி கொண்டாட்டங்களை, 'தேசிய தினக் கொண்டாட்டம்' என்று சொல்லாமல், 'மே 17 கொண்டாட்டம்' (Sytende Mai = Seventeenth May) என்றே சொல்கின்றார்கள். 1814 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதியன்று, நோர்வேயின் அரசியல் நிர்ணய அமைப்பு கைச்சாத்திடப்பட்டது. அதற்குப் பின்னர் பல அரசியல் மாற்றங்கள், அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த நாள் நோர்வேயில் மிக முக்கிய நாளாகவும், கொடிதினமாகவும் கொண்டாடப் படுகின்றது.

மே மாதத்தின் ஆரம்பத்தில் இரு கிழமைகளும் (மே 1 ஆம் திகதியில் இருந்து மே 17 ஆம் திகதி வரை), பதின்ம வயதின் இறுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு (மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு போகப் போகும் மாணவர்கள்) மிகப் பெரிய கொண்டாட்டம். பெற்றோரின் பாதுகாவலில் இருந்து வெளியேறி, திடீரென குழந்தைப் பருவத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமாக, வளர்ந்தோரின் நிலையை அடைவதாக இந்த நாட்களை எடுத்துக் கொள்கின்றார்கள். It is an abrupt way of ending the childhood and the entering into adulthood, but also marks acomplishing high school. இவர்களை Russ என்ற தனிப் பெயரிட்டு அழைப்பார்கள். இந்த இரு கிழமைகளில், மிகவும் சுதந்திரமாக, குதூகலமாக (பாடித் திரியும் பறவைகள் போலே) இருப்பார்கள். அந்த நாட்களில், அதற்கென விசேஷமாக இருக்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள். ஆடையின் நிறங்கள் அவர்களது கல்வி முறைக்கேற்ப அமையுமாம். நான் அதிகம் கண்டது சிவப்பு நிற, நீல நிற ஆடைகள்தான். அந்த ஆடைகளில் நண்பர்கள் நினைத்ததெல்லாம் எழுதி வைப்பார்கள். இரு கிழமைகளும் அந்த ஆடை autograph (இதுக்கு தமிழ் என்ன?) மாதிரியான ஒரு வகைப் பயன்பாட்டில் இருக்கும். அதன் பின்னர், அதை அப்படியே வைத்திருப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை.

நோர்வே என்றதும் பலருக்கும் நினைவில் வருவது 'நடு இரவுச் சூரியன் - (Midnight Sun)'. நோர்வே பூமிப் பந்தின் வட துருவத்தை ஒட்டி இருப்பதால், கால மாற்றங்கள் (seasonal changes) மிகத் தெளிவான வேறுபாட்டுடன் அமைந்திருக்கின்றது. நான் முதன் முதல் நோர்வேயில் வந்து இறங்கியது ஒரு குளிர் காலம். நாள் 1993 டிசம்பர் 25 ஆம் திகதி, கிறிஸ்மஸ் நாள். அன்று இந்த புதிய நாடும், இங்கே கொட்டியிருந்த வெள்ளை மழையும் (அதுதான் snow) ஒரு புதிய அனுபவம். வந்த புதிதில், இங்குள்ள இரவு பகல் வேறுபாடு, காலநிலை பற்றி மாய்ந்து மாய்ந்து வீட்டுக்கு எழுதியதில், பல கடிதங்களின் பக்கங்கள் நிறைந்து போனது.

அதுபற்றி எனது அடுத்த பதிவில் எழுதுகின்றேன். :)