Monday, June 11, 2007

மொழி!

மொழி!

நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.

மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.

படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது :). பெண்ணின் பெற்றோரிடம், "நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்." என்று சொல்வது நன்றாக இருந்தது :).

அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.

படத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.

மேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.

காதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.

ஆனாலும், அந்த 'பேசா மடந்தையே' என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது.

எனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை 'மொழி', 'மெளனம்'.


அன்புக்கு மொழி அவசியமில்லை!!!

பி.கு> இந்த படத்தை ஒரிஜினல் VCD யில் அல்லாமல் திருட்டுத் தனமாக தான் பார்த்ததும் அல்லாமல், என்னையும் பார்க்க வைத்த ரவிசங்கருக்கு நன்றி! படத்தை பார்ப்பதில் இருந்த ஆர்வம் குற்றம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை மறக்கச் செய்து விட்டது. :)