Thursday, July 05, 2007

பகல் ராத்திரி!

நோர்வே - 8


நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில் சூரியன் வானத்தில் வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் அறிந்தவர் அறியாதவர் என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது புன்னகைத்து செல்லும் காலமாக இருக்கும்.
பைபிளில் குறிப்பிடப்படும் Johannes என்பவரின் பிறந்தநாள் 24 ஜூன் என்றும், அந்த நாளை குறிப்பிடும் விதமாக, அந்த நாளுக்கு முதல் நாள் மாலையில், அதாவது 23 ஜூன் அன்று மாலை இந்த கொண்டாட்டம் நடாத்தப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. Sankthansaften என்று குறிப்பிடுகின்றார்கள்.
Sankthansaften நாளில் பகலில் இரு குழந்தைகளை மணமக்களாக அலங்கரித்து, அவர்களுக்கிடையே, விளையாட்டுத் தனமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவர்களை குதிரை வண்டிலில் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அந்த ஊர்வலத்தில் நிறைய மக்கள் கலந்து கொள்வார்கள் (சிறப்பிப்பார்கள் :) ). இது நடந்த நேரம் நாங்கள் போய்ச் சேரவில்லை. அதனால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி இங்கே...

ஒரு சில நாட்கள் முன்னராக குறிப்பிட்ட இடங்களில், மிக உயரமான கோபுரங்களை கட்டுவார்கள்.

இங்கே இருக்கும் படத்தில் ஒரு பெரிய கோபுரமும், பக்கத்திலேயே ஒரு குட்டிக் கோபுரமும் இருப்பதை காணலாம்.
அவற்றை அந்த நாள் மாலையில் எரிப்பார்கள்.

பெரிய கோபுரத்தின் உச்சியில் ஏறி தீ மூட்டும் காட்சி. அப்போது நேரம் மாலை 9.30.

தீ வைத்த பின்னர், அவசரமாக இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

உச்சியில் உள்ள கூர்மையான முனை எரிகின்றது.

எரிந்து கொண்டு போகும்போது முனை கீழே விழுகின்றது, புகை கிளம்புகின்றது. அடிக்கடி நீரை அடித்து சூட்டை குறைப்பதுடன், மெதுவாக எரியும்படி பார்த்துக் கொள்கின்றார்கள்.
அதற்கு எங்கள் ஊரில்போன்று பழங்கதைகளும் உள்ளன. :) ஊரில், மலைகளில் வந்து தங்கி இருக்கும் தீய சக்திகள், பேய், பிசாசு போன்றவை, இந்த பெரிய தீப்பிழம்பைக் கண்டு ஓடிப் போய் விடுமாம். தற்போது யாரும் இந்த கதைகளை நம்புவதில்லை என்றாலும், ஒரு மகிழ்ச்சியான பொழுது போக்காகவும், முழு பகலைக் கொண்ட நாளில் ஒரு கொண்டாட்டமாகவும் இதை தொடர்ந்து செய்து வருகின்றார்களாம். அந்த கோபுரம் எரிக்கும் நாளில் , ஜூன் 23 ஆம் திகதி, கோபுரம் இருக்கும் இடத்தை சுற்றி கூடாரங்கள் எல்லாம் போட்டு, ஒரு திருவிழா மாதிரி அமைத்து வைத்திருப்பார்கள். பல இடத்திலிருந்தும் அங்கே வந்து கூடி, குடித்து, கும்மாளமடிப்பார்கள். மாலை 9.30, 10 மணிக்கு அந்த கோபுரம் எரிக்கப்படும். அதன் பின்னர் இரவிரவாக (இரவு எங்கே வருது, அதுதான் வெளிச்சமாக இருக்குமே :) ) சுற்றித் திரிவார்கள்.

தீ அந்த மாலை (இரவு) வேளையில் அழகாக கொழுந்து விட்டு எரிகின்றது.


Photo Sharing and Video Hosting at Photobucket

நேரம் நடு இரவு 12 மணி. இன்னும் தெளிவான வெளிச்சம் இருப்பதை காணலாம்.

எங்கள் நாட்டில் சில கோவில்களில், சிவராத்திரி நாளன்று இப்படி கோபுரம் கட்டி எரிப்பதையும், இரவிரவாக மக்கள் விளித்திருந்து கொண்டாடுவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கே சிவராத்திரி, இங்கே அது “பகல்ராத்திரி”. :)