Monday, October 01, 2007

மூட நம்பிக்கையும், அதன் பலனும்??

நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே........

ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று வரவேண்டி இருந்தது. அவரும், அவரது மனவியும் இப்படி அடிக்கடி உடல்நிலை குன்றிப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்களாம். அதற்கு ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போனார்களாம்.

இந்த வயோதிபரின் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் சொன்னாராம், "உங்களுடைய கோவிலில் இருக்கும் கடவுள் வைரவரை ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் வைரவர் தனது சக்தியை பயன்படுத்தி, உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கின்றார். அதனால்தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல்நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்".

(உடனே நான் கேட்டேன், "மனிதனால் ஒரு கடவுளை கட்டி வைக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கவில்லையா" என்று. அதற்கு அவர், "நான் சொல்லும் கதையை முழுவதுமாய் கேளுங்கோ" என்று சொல்லி தொடர்ந்தார்.)

அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, செய்வினை செய்து புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து அகற்ற வேண்டும் என்று சொன்னாராம். அவர்களுக்கு உதவியாக (புதைத்து வைக்கப்பட்டிருக்கும் செய்வினையை தோண்டி எடுத்து அகற்றுவதற்கு) பக்கத்து வீட்டிலிருப்பவரை கூட்டிக் கொண்டார்களாம். மை போட்டுப் பார்ப்பவர் வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார்களாம். மை போட்டுப் பார்ப்பவருக்கு பணமும் கொடுத்து அனுப்பினார்களாம்.

அந்த வயதானவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல்நலக் குறைவும் வரவில்லையென்றும், தன்னால் இப்போது துவிச்சக்கர வண்டி ஓட்டிக் கொண்டு செல்லக் கூட முடிகின்றது என்றும் ஆனந்தமாக கூறுகின்றாராம்.
இந்தக் கதையை என்னிடம் சொன்னவர் சொல்கின்றார். அந்த வயதானவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார். அந்த வயதான தம்பதிகளிடம் நிறைய பணம் இருக்கின்றது. அந்த மை போட்டுப் பார்ப்பவருக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள். அதனால் அந்த பணம், அந்த மை போடுபவரின் குடும்பத்தினரின் பாவனைக்கு போய் சேருகின்றது. அதுவும் நல்லதுதானே என்று. இவருக்கும் சுகம், அவர்களுக்கும் தேவையான பணம்.

இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று யோசிக்கின்றேன். :^)